தெலுங்கானா மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்: சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட தெலுங்கானா மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைவதால், அதற்குள் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்த அமளிக்கிடையே உள்துறை அமைச்சர் ஷிண்டே, தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது சீமாந்திரா எம்.பி.க்கள், தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. பின்னர் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, தெலுங்கானா மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. திடீரென நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தெலுங்கானா மசோதா சிக்கலின்றி நிறைவேற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ராஜ்யசபா சபாநாயகர் ஹமீது அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார்.