ராணுவ வீரர் ஹேம்ராஜ் தலையைத் துண்டித்த பாக். தீவிரவாதியை சுட்டுக் கொன்ற இந்திய ராணுவம்
டெல்லி: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி கடந்த ஜனவரி 2013 ஆம் வருடம் லான்ஸ் நாயக் ஹேம்ராஜை தலை துண்டித்துக் கொன்றவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லை வழியாக காஷ்மீரில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படையினரும் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். என்றாலும் அவ்வப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயற்சித்து வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி வழியாக இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
உடனடியாக இந்திய பாதுகாப்பு படையினர் உஷாராகி, அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் தப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லை பாதுகாப்பு படையினர் தக்க சமயத்தில் இந்த ஊடுருவலை கண்டுபிடித்ததால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியான முகமது அன்வர் கான், ராணுவ வீரரான ஹேம்ராஜைத் தலை துண்டித்து கொன்றதற்காக 5 லட்சம் பரிசளிக்கப்பட்டவன் என்ற செய்தியினை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.