புத்தகயா கோவிலுக்கு தாய்லாந்தில் இருந்து 300 கிலோ தங்கம் வருகை
பாட்னா: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலின் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக பக்தர்கள் நன்கொடையாக அளித்த 300 கிலோ தங்கத்தை 24 தாய்லாந்து கமாண்டோக்கள் பாதுகாக்கின்றனர்.
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள 1,500 ஆண்டு பழமை வாய்ந்த மகாபோதி கோவிலின் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்படவிருக்கிறது. இதற்காக தாய்லாலந்தில் உள்ள பக்தர்கள் நன்கொடையாக அளித்த 289 கிலோ தங்கம் பேங்காக்கில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீகாருக்கு வந்துள்ளது. கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணியை செய்ய தாய்லாந்தில் இருந்து நிபுணர்கள் வந்துள்ளனர். தாய்லாந்து நிபுணர்கள் தங்கள் பணியை துவங்கிவிட்டனர்.

இது குறித்து கோவில் குழு உறுப்பினர் அரவிந்த் குமார் சிங் கூறுகையில்,
தாய்லாந்து நிபுணர்களின் பணி வீடியோ எடுக்கப்படுகிறது. 24 நிபுணர்கள், 24 கமாண்டோக்கள் என 40 பேர் கொண்ட குழு 13 பெட்டி நிறைய தங்கத்துடன் புத்தகயா வந்துள்ளது. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க பெட்டிகளுக்கு 24 தாய்லாந்து கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றார்.
கமாண்டோக்கள் தவிர மாவட்ட நிர்வாகமும் கூடுதலாக பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் வேலையில் தாய்லாந்தைச் சேர்ந்த கிரீங் தவோர்ன் கன்டெய்னர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தங்க முலாம் பூசும் முடிவை தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யா கடந்த ஆண்டு எடுத்தார்.
இந்த கோவிலில் தான் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications