மக்களவை துணை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வானார் தம்பிதுரை: ஒத்துழைப்பு தருவோம் என மோடி உறுதி
டெல்லி: மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தம்பி துரைக்கு அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு மத்தியில் பதவி ஏற்ற பிறகு, புதிய சபாநாயகராக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதனிடையே மக்களவைக்கான துணை சபாநாயகர் தேர்வு இன்று நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கி மதியம் முடிவடைந்தது. துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட அதிமுகவின் தம்பிதுரை மட்டுமே மனு தாக்கல் செய்தார். வேறு எந்த கட்சி சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
தம்பிதுரையின் வேட்புமனுவை பாஜகவின் மூத்த அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் இதற்கு ஒப்புதல் அளித்தார். மக்களவை சபாநாயகராக ஆளும்கட்சியை சேர்ந்தவர் இருப்பார் என்பதால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாத நிலையில், அக்கட்சியால் துணை சபாநாயகர் பதவிக்கு உரிமை கோர முடியவில்லை.
மக்களவை துணை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வானார் தம்பிதுரை: ஒத்துழைப்பு தருவோம் என மோடி உறுதி இந்நிலையில் போட்டியின்றி தம்பிதுரை ஒருமனதாக துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக சென்று தம்பிதுரையை அழைத்து துணை சபாநாயகருக்கான இருக்கையில் அமரச் செய்தனர்.
இதன்பிறகு பேசிய மோடி, மரபுப்படி மக்களவை துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தம்பிதுரை சிறப்பாக அவையை வழிநடத்துவார் என்று நம்புகிறோம். அவருக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினர்.
தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராகியுள்ளது இது 2வது முறையாகும். ஏற்கனவே 1985 முதல் 1989 வரை துணை சபாநாயகராக தம்பிதுரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பிதுரை தற்போது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 67 வயதான தம்பிதுரை நாடாளுமன்ற அ.தி.மு.க கட்சி தலைவராகவும் உள்ளார். 1984ல் முதல்முறையாக தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர். 1989, 1998,2009,2014 என மொத்தம் 5 முறை மக்களவைக்கு எம்.பியாக தேர்வானவர் தம்பிதுரை.
{ventuno}
சலுகைகள்:
அரசியல் சட்ட விதிகளின்படி அதிகார வரிசையில் 10வது இடம் வகிக்கும் மக்களவை துணைத் தலைவர் பதவி, மத்திய இணை அமைச்சர் அந்தஸ்து உடையது. தலைவர் இல்லாத நேரங்களில் சபையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு முக்கியமானது. நாடாளுமன்றத்தில் தனி அலுவலகம் தரப்படும். சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்யலாம். தனக்கென ஒரு அதிகாரி மற்றும் 5 அலுவலர்களை பணியமர்த்திக் கொள்ளலாம். தனி பாதுகாப்பு அதிகாரி எப்போதும் உடன் இருப்பார்.
நாடாளுமன்றத்தின் இரு முக்கியக் குழுக்களுக்கு துணைத் தலைவர் தலைமை வகிப்பார். அதில் முக்கியமானது நூலக கமிட்டி. மற்றொன்று எம்.பி.க்களை உறுப்பினர்களாக கொண்டதும், பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதுமான டெல்லி அரசியலமைப்பு கிளப் தலைவர் பதவி ஆகும்.