யூடியூப் வீடியோவால் 40 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த கம்பீர்
Recommended Video
மும்பை: 40 ஆண்டுகளுக்கு முன்பு இம்பாலில் இருந்து மாயமான நபர் யூடியூப் வீடியோ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மணிபூர் மாநிலத்தில் உள்ள இம்பாலை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65). அவர் 1978ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று யூடியூப்பில் வீடியோ ஒன்றை பார்த்த அவரின் குடும்பத்தாரால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. காரணம் அந்த வீடியோவில் இருந்தது கம்பீர் சிங்.
மும்பை ரயில் நிலையத்தில் கம்பீர் சிங் பாடியதை வீடியோ எடுத்த ஃபேஷன் டிசைனர் அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். உடனே சிங்கின் குடும்பத்தார் இம்பால் போலீசாரை அணுகி அவரின் புகைப்படத்தை அளித்துள்ளனர். அவர்களும் புகைப்படத்தை மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பந்த்ரா போலீசார் புகைப்படத்துடன் ரயில் நிலையத்திற்கு சென்று கம்பீர் சிங்கை அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர். யூடியூப் வீடியோவை பார்த்த இருவர் கூறியதாவது, நாங்கள் வீடியோவை பார்த்ததும் அதை கம்பீரின் சகோதரர் சந்திராவிடம் காண்பித்தோம். அவர் வீடியோவை பார்த்துவிட்டு அழத் துவங்கிவிட்டார் என்றனர்.
2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி யூடியூப்பில் வெளியான வீடியோவை கடந்த வெள்ளிக்கிழமை தான் கம்பீர் குடும்பத்தார் பார்த்துள்ளனர்.