நோபல் பரிசு மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்: கைலாஷ் சத்யார்த்தி
டெல்லி: இந்த விருது குழந்தைகள் நலனுக்காக நான் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி இருக்கிறது என்று இந்த ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு கிடைத்துள்ளது. அவர் இந்த விருதை பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுடன் சேர்ந்து பெறுகிறார்.
தெற்கு டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் அவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் நேற்று படையெடுத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவருடைய மனைவி சுமேதா, ‘‘ஏழை, எளியவர்களுக்கான இடைவிடாமல் பாடுபட்டு வரும் எனது கணவரைப் போன்ற எளிமையான ஒரு மனிதருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்றார்.
நோபல் பரிசு கமிட்டிக்கு நன்றி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ் சத்யார்த்தி,
இந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
மகாத்மாவுக்கு வழங்கியிருந்தால்
நான் மகாத்மா காந்தி இறந்ததற்கு பிறகு பிறந்தவர். இந்த பரிசு எனக்கு முன்னதாக மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் அதை விட இன்னும் நான் பெருமை அடைந்து இருப்பேன். இது நிஜமாகவே எனக்கு கிடைத்த கவுரவம் தான். இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.
குழந்தைகளின் உரிமைகள்
குழந்தை தொழிலாளர் முறை என்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் வறுமையும் மட்டுமே அல்ல. அதற்கும் மேலானது. எனவே இந்த போராட்டம் தொடரும். இந்த பிரச்சினை உலக அளவில் இன்று அங்கீகரிக்கப்பட்டு இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
இன்னும் பொறுப்புடன் போராடுவோம்
குழந்தைகளின் உரிமைகளுக்காக நாங்கள் எளிய முறையில் போராடி வருகிறோம். இந்த விருது குழந்தைகள் நலனுக்காக நான் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி இருக்கிறது.
மிகப்பெரிய சவால்
இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமின்றி இன்னும் ஏராளமான நாடுகளில் உள்ளது.குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடுவது மிகப்பெரிய சவாலாகும். காந்திய வழியில் அமைதியான முறையில் எங்களது போராட்டங்களை பல்வேறு வடிவில் நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அறப்போராட்டம்
கைலாஷ்சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அமைதியான முறையில் நிகழ்த்தி உள்ளார். பணத் தேவைக்காக அவர்களின் குழந்தை பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பல்வேறு விருதுகள்
இவருடைய சேவைக்காக 2007-ல் இத்தாலிய பாராளுமன்ற விருது, 2009-ல் அமெரிக்காவின், தற்காப்போருக்கான ஜனநாயக விருது, ராபர்ட் எப்.கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது (அமெரிக்கா), பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது (ஜெர்மனி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகள் கிடைத்துள்ளன.