தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸ்.. வாபஸ் வாங்கியது தேர்தல் ஆணையம்
குஜராத்தில் தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
டெல்லி : குஜராத்தில் தேர்தல் விதிகளை மீறி தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் விதிமீறலுக்கான நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகள் நடந்தது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த 14ம் தேதிக்கு முன்னதாக, சில தொலைக்காட்சிகளில் ராகுல் காந்தியின் பேட்டி ஒளிபரப்பானது.
இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும், ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாகவும் நடவடிக்கை எடுக்குமாறும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக அனைத்து வித பிரச்சாரங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற தேர்தல் நடத்தை விதியை மீறியதாகவும், இதற்கு 18ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ராகுலுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக எந்த வித பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது தான் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ விதி.
இதில் டி.வி., ரேடியோ, இணையம் போன்றவை சேர்க்கப்படவில்லை இதை காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டினர். இதனால் விரைவில் இவற்றை இந்தப்பட்டியலில் இணைத்து புது சட்டம் நிறைவேற்றப்படுமா என்பதை சட்ட ஆய்வுக்குழு முடிவு செய்யும் இதன் காரணமாக ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.