மணிப்பூரில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக.. பிரேன் சிங் தலைமையில் இன்று அமைச்சரவை பதவியேற்பு
மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை இன்று (புதன்கிழமை) பதவியேற்க உள்ளனர்.
இம்பால்: முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ள மணிப்பூரில் முதல்வராக பிரேன் சிங்கும், அவரது தலைமையிலான புதிய அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளனர்.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் அதற்கான முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பெரும்பான்மை இல்லாததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்குள்ள உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க போராடியது.
இந்நிலையில்,தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும், சுயேச்சை எம்எல்ஏ-க்களும் என மொத்தம் 11 எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.
மொத்தம் 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் வழங்கிய பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கோவா சட்டசபை பாஜக எம்எல்ஏ-க்களின் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேன் சிங்கை ஆட்சி அமைக்க ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வராக பிரேன் சிங், அவரது அமைச்சரவை சகாக்களும் இன்று பதவியேற்கவுள்ளனர். இம்பாலில் நடைபெறும் விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications