ஜன. 29ல் துவங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப்.1ல் பட்ஜெட் தாக்கல்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது. 2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதி நாளில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பட்ஜெட்டை அமல்படுத்துவதில் கஷ்டம் நிலவியதால் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து, கடந்த ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் 2 கட்டமாக நடத்தப்படும். பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் வரும் 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், 2ம் கட்டம் மார்ச் 5 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடக்கும்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதன்பிறகு, பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2019ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது என்பதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.