நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்து விடுதலையான குற்றவாளி.. தாபாவில் ஹாயாக சப்பாத்தி சுடுகிறார்!
நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இளம் குற்றவாளி தென்னிந்தியாவில் உள்ள ஒரு சாலையோர கடையில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
டெல்லி: ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் மேல்முறையீட்டு வழக்கில் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவனான சிறுவன் என 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளம் குற்றவாளி தென்னிந்தியாவில் உள்ள சாலையோரக் கடை ஒன்றில் சமையல்காரராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் அரங்கேற்றிய இந்த அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதில் தொடர்புடைய ராம்சிங் என்பவர் டெல்லி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனைக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.
குற்றவாளிகள் மேல்முறையீடு
மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட சிறுவன்
இந்நிலையில் சிறுவன் என விடுவிக்கப்பட்ட இளம்குற்றவாளி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது 18 வயதை பூர்த்தி செய்துள்ளார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் தண்டனையை கழித்த அவர், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
தனித்தொழில் பயிற்சி
இதைத்தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் அவருக்கு சீர்திருத்த பயிற்சி அளிக்கப்பட்டது. சமையல், தையல் பெயின்டிங் உள்ளிட்ட தனித்தொழில்களும் கற்றுகொடுக்கப்பட்டது.
சாலையோர கடையில் சமையல்காரர்
இதையடுத்து சாலையோர கடையில் சமையல்காரராக அந்த இளம் குற்றவாளி பணிபுரிந்து வருகிறார். தொண்டு நிறுவனத்தில் இருந்தபோதே அவர் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வயதில் ஓடி வந்தவர்
டெல்லியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டெல்லிக்கு தனது 11 வயதில் ஓடி வந்த இந்த இளம் குற்றவாளி பேருந்து ஒன்றில் கிளீனராக பணிபுரிந்தார். அந்தப் பேருந்தில்தான் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.