மதம் அல்ல.. கையகப்படுத்திய இடம்தான் முக்கியம்.. மசூதி தீர்ப்பு கூறுவது என்ன?
Recommended Video
டெல்லி: அயோத்தியில் நிலம் கையகப்படுத்தப்பட்டதுதான் விவகாரமே தவிர, அந்த விஷயத்தை மதத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பும் கூட இஸ்லாமுக்கு மசூதி முக்கியமா என்பது குறித்து விவாதிக்கவில்லை. மாறாக, சர்ச்சைக்குரிய இடம் கையகப்படுத்தியது தொடர்பான தீர்ப்பைத்தான் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிடுகையில், அரசு எந்த நிலத்தையும் கையகப்படுத்த முடியும். அங்கு கோவில் இருக்கிறதா, சர்ச் இருக்கிறதா, மசூதி இருக்கிறதா என்று பாகுபாடு கிடையாது என்றார்.
இன்றைய அயோத்தி துணை வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வாசித்தபோது நீதிபதி இந்தக் கருத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில், அனைத்து மதங்களும், அனைத்து மசூதிகளும், அனைத்து சர்ச்சுகளும், அனைத்து கோவில்களும் சமமானவையே. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார் நீதிபதி மிஸ்ரா.
மத வழிபாடு
1994ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதியில்தான் தொழுகையை நடத்த வேண்டும் என்று இஸ்லாமில் கூறப்படவில்லை. எங்கிருந்தும் நடத்தலாம் என்றுதான் உள்ளது. எனவே உ.பி. அரசு சர்ச்சைக்குரிய மசூதி (பாபர் மசூதி) அமைந்துள்ள இடத்தை கையகப்படுத்தியதில் தவறில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்துத்தான் அப்பீல் செய்யப்பட்டிருந்தது. அந்த அப்பீல் மீதுதான் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இஸ்லாம் குறித்த வழக்கு அல்ல
அதேசமயம், இன்றைய வழக்கானது இஸ்லாமில் மசூதிக்கு உள்ள முக்கியத்துவம் குறித்தது என்று செய்திகள் பரவி விட்டன. ஆனால் உண்மையில் இஸ்லாம் - மசூதி, இந்த விவகாரத்துக்குள்ளேயே கோர்ட் போகவில்லை. மாறாக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மசூதி இருப்பதால் அது கையகப்படுத்தப்பட்டது தவறு என்ற வாதத்தை மட்டும்தான் அது விசாரித்து தீர்ப்பை அளித்துள்ளது.
பிரதான வழக்கு சூடு பிடிக்கும்
தற்போதைய தீர்ப்பின் மூலம் முக்கிய வழக்கின் விசாரணை தடையின்றி தொடர வழி வகுத்துள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தீர்ப்பும் வெளியாகக் கூடிய வாய்ப்புகளும் கூடியுள்ளன. ஒரு வேளை இன்றைய வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தால் பிரதான வழக்கு மேலும் தாமதமாகக் கூடிய வாய்ப்புகள் இருந்தன.
இது பாஜகவுக்கு சாதகமே
ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரமானது அரசியலாக்கப்பட்டு விட்டது. இதை வைத்துத்தான் இந்துத்வா அமைப்புகள் அரசியலும் செய்துள்ளன, வருகிற லோக்சபா தேர்தலுக்கும் கூட ராமர் கோவில் விவகாரத்தைத்தான் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். 2014 தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது முக்கியமாக இடம் பெற்றிருந்தது. அதேபோல 2017 உ.பி. சட்டசபைத் தேர்தலிலும் கூட ராமர் கோவில் கட்டுவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கூறியிருந்தது.
இந்த நிலையில் 2019 தேர்தல் அறிக்கையிலும் பாஜக இதையே பிரதானமாக முழங்கப் போகிறது. அந்த வகையில் அயோத்தி விவகாரத்தில் முக்கிய வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வகையில் இன்றைய தீர்ப்பை பாஜகவுக்கு சாதகமானதாக கூட கருத முடியும்.