கர்நாடக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: சித்தராமையா பேட்டி
பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது:
பெங்களூர் வெறும் கர்நாடக நகரம் கிடையாது. அது சர்வதேச நகரம். அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலான கலவரங்களுக்கு அனுமதிக்க முடியாது.
சட்டம்-ஒழுங்கு என்பது கர்நாடகாவுடன் மட்டுமே சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது. தமிழகத்துடனும் தொடர்புள்ளது. இரு மாநிலங்கள் நடுவே மக்கள் போக்குவரத்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களும், தமிழகத்தில் கன்னடர்களும் வசிக்கிறார்கள். எனவே சட்டம்-ஒழுங்கு சீர்கெட விடவே மாட்டோம். கர்நாடகாவிலுள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்கும். சட்டம்-ஒழுங்கை கையில் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மீடியாக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வீடியோக்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.