அமைச்சர் வி.கே.சிங்கை விமர்சித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்- திடீர் பரபரப்பு
டெல்லி: இந்திய ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ள தல்பிர்சிங்குக்கு எதிராக சட்டவிரோதமாக நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டி, மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிற்கு எதிராக ஒரு பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசே குற்றம் சாட்டிய ஒருவர், அமைச்சராக இருக்க கூடாது என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் வி.கே.சிங். இவருக்கும் ராணுவ துணை தளபதியாக பதவி வகித்துவந்த தல்பிர்சிங் சுகாக்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல்பிர்சிங் சுகாக் ராணுவ கமாண்டராக பதவி உயர்வு பெற்ற நேரத்தில், அதை தடுத்த வி.கே.சிங், ஒழுங்கு நடவடிக்கைக்கு அவரை உட்படுத்தினார். 2012 ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் தல்பிர்சிங் இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
2011ம் ஆண்டு அசாம் மாநிலம் ஜோர்காட் என்ற பகுதியில் கான்டிராக்டர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த ராணுவ உளவுப்பிரிவு வீரர்கள், வீட்டை சோதனையிட வந்ததாக பொய் சொல்லி, வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்று்ள்ளனர். அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகத்தான் தல்பிர்சிங் மீது ஒழுங்கு நடவடிக்கையை வி.கே.சிங் எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் தான் விடுப்பில் இருந்த காலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறி தல்பிர்சிங் அப்பிரச்சினையில் இருந்து வெளியேவந்தார். ராணுவ கமாண்டராகவும் ஆனார்.
இந்நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் ரவிதஸ்தானே என்ற அதிகாரி, தல்பிர்சிங் ராணுவ கமாண்டராக பொறுப்பேற்றது சரியில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய பாதுகாப்பு துறை சார்பிலான பதிலை நீதிமன்றம் கேட்டது. இதன்படி மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாணப்பத்திரத்தில், தல்பிர்சிங்கின் பதவி உயர்வுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வி.கே.சிங் எடுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
"தல்பிர்சிங்கிற்கு எதிராக ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது, திட்டமிட்ட செயல், உண்மைக்கு புறம்பானது" என்று அரசு தனது பிரமாணப்பத்திரத்தில் வி.கே.சிங்கின் நடவடிக்கைகளை வர்ணித்துள்ளது. வி.கே.சிங்கின் ஓய்வுக்கு பிறகு, ராணுவ தளபதியாக தல்பிர்சிங்கை நியமிக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு பரிந்துரை செய்துள்ளது. எனவே அடுத்த ராணுவ தளபதியாக தல்பிந்தர்சிங் நியமிக்கப்பட உள்ளார். இவரது நியமனத்தை மத்திய அரசு எதிர்த்தால், அது ராணுவத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் இதுபோன்ற ஒரு பிரமாணப்பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரமாணப்பத்திரத்தால் இப்போது அரசு குழப்பத்தில் சிக்கியுள்ளது.
வி.கே,சிங் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் பாஜகவில் இணைந்து தற்போது மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். வடகிழக்கு மாநில பொறுப்புக்கான தனிபொறுப்புடன் கூடிய அமைச்சராகவும் இவர் உள்ளார். வி.கே.சிங் ராணுவ தளபதியாக இருந்தபோது மற்றொரு அதிகாரிக்கு எதிராக திட்டமிட்டு சட்டவிரோதமாக நடவடிக்கை எடுத்ததாக மத்திய அரசே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதால், அவர் அமைச்சராக பதவியில் தொடர தகுதியுடையவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் இதே கேள்வியை எழுப்பியுள்ளது. அரசால் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் சான்றளிக்கப்பட்ட ஒருவர் அமைச்சராக எப்படி தொடர முடியும் என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சராக வி.கே.சிங் தொடருவாரா, இல்லை அரசின் பிரமாணப்பத்திரத்தால் கோபமடைந்து ராஜினாமா செய்யப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.