நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என அழைத்துக் கொள்ளட்டும்: மத்திய அரசு
நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என்று மத்திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி. சிங் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதே போல் ஸ்கீம் என்றால் என்ன என்ற சந்தேகம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் 3 மாதம் கால அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆலோசனை கூட்டம்
அப்போது காவிரி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து டெல்லியில் மத்திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
பெயர் எதுவாக இருந்தாலும்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிங் கூறுகையில், காவிரி வாரியம் பெயரில் பிரச்சினையில்லை. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்சினையில்லை.
தீர்ப்பு மட்டுமே ஆலோசனை
காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகத்தில் அழைக்க எந்த பிரச்சினையும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்படுகிறது.
கூட்டாட்சி அடிப்படையில்
காவிரி விவகாரத்தில் அந்த மாநிலங்கள் அதன் நலன்களை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மத்திய அரசு கூட்டாட்சி அடிப்படையில் பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும். நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது என்றார் சிங்.