இந்தியா நடத்திய எல்லைத் தாண்டிய தாக்குதல்கள்!
இந்திய மியான்மர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தியது.
டெல்லி: இந்திய மியான்மர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தியது.
மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கியிருப்பதாக இந்திய ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து அதிகாலை 4.45 மணிக்கு அந்த பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினர், தீவிரவாத முகாம்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் தேசிய சோஷியலிச நாகாலந்து கவுன்சிலைச் சேர்ந்த இயக்கத்தினரின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எந்த சேதமில்லை
70 வீரர்களை கொண்ட இந்தியப் படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்தியப் படைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தாக்குதல் முதல்முறையல்ல
இந்திய ராணுவம் மியான்மரில் எல்லைத் தாண்டி சென்று தீவிரவாத முகாம்களை அழிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய படைகள் நாகா தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
இரண்டாவது முறையாக தாக்குதல்
இதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்த சில நாட்களிலேயே நாகா தீவிரவாதிகள் மணிப்பூரில் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரண்டாவது முறையாக இந்திய ராணுவம் இன்று மியான்மர் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை அரங்கேற்றியது. இதில் பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஒப்பந்தத்தை மீறிய என்எஸ்என்சி
தேசிய சோஷியலிச நாகாலந்து கவுன்சில் இந்தியாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கடந்த 2001ஆம் கையெழுத்திட்டது. ஆனால் அதனை புதுப்பிப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்ததை அந்த இயக்கம் ரத்து செய்தது.
கப்லாங் தலைமையில் தாக்குதல்
பின்னர், அந்த இயக்கத்தின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கின் தலைமையில் அந்த இயக்கத்தினர் நாகலாந்து மற்றும் மணிப்பூரில் இந்திய வீரர்களைத் தாக்கி கொலை செய்தனர். ஜூன் 4, 2015 அன்று மணிப்பூர் மாநிலத்தில் சண்டேல் மாவட்டத்தில் 6 டாக்ரா ரெஜிமெண்டின் ஒரு வாகனத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கப்லாங் மரணம்
மியான்மர் நாட்டின் டாக்காவில் ஜூன் 9 ம் தேதி அந்த அமைப்பின் தலைவரான கப்லாங் இறந்தார். இருப்பினும் அந்த அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர்.