கேஸே இல்லாமல் பத்த வைக்கும் "பரட்டைகள்"... பெங்களூரு அருகே ஒரு தீப்பொறி கிராமம்!
பெங்களூரு: பெங்களூரு அருகே லட்சுமி புரா என்ற கிராமத்தில் அடுப்புகளே கிடையாது. எரிபொருளும் இல்லை. ஸ்டவ்வே இல்லாமல் இந்த ஊரில் மக்கள் சமயைல் செய்து வருகிறார்கள். எப்படி தெரியுமா.. அதுதான் செய்தியே. வாங்க, நிகழ்ச்சிக்குள்ள போவோம்!.
பெங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆனேகல். இதையொட்டியுள்ள கிராமம்தான் லட்சுமிபுரா. ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே, ரத்த பூமி என்று, அது போல இந்த ஊர் ஒரு சிலிண்டர் பூமி. இந்த ஊருக்குக் கீழே மீத்தேன் வாயு குவிந்து கிடக்கிறது. இதுதான் இந்த ஊரின் ஸ்பெஷாலிட்டியாகியுள்ளது.
இந்த ஊரில் உள்ளவர்கள் சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை வீ்ட்டுக்கு வெளியில்தான் செய்கிறார்கள். மூன்று கல்லை வைத்து நடுவே சுள்ளிகளைப் போட்டு மண்ணை மெதுவாக கிளறி விட்டு அப்படியே பற்ற வைத்து விட வேண்டியதுதான். நமக்குத் தேவைப்படும் நேரம் வரை அடுப்பு அது பாட்டுக்கு எரிந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு இந்த கிராமத்தில் மீத்தேன் வாயு பூமிக்குள் இருக்கிறது.
மீத்தேன் இப்படி அபரிமிதமாக இருப்பதால் இந்த ஊர் மக்கள் சமையல் செய்ய செலவே செய்வதில்லை. சுடு தண்ணீர் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை எல்லாமே டைரக்டாக பற்ற வைத்துத்தான்.
இந்த கிராமத்துக்குக் கீழே பூமிக்குள் பெருமளவு மீத்தேன் வாயு உள்ளது. இது பூமிக்கு மேலே வெளிவந்த வண்ணம் உள்ளது. எங்காவது தண்ணீர் தேங்கி நின்றால் போதும் கொஞ்ச நேரத்திலேயே அது சுடு தண்ணியாகி விடும்.
இந்தப் பகுதியில் பல காலத்திற்கு முன்பு பெருமளவில் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனர். அதுவும் ஆர்கானிக் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனர். இவை அனைத்தும் இங்கேயே தங்கித் தங்க உள்ளே போய் மக்கி மீத்தேன் வாயு உற்பத்தியாகி வருகிறதாம்.
இதன் காரணமாக இந்தக் கிராமத்துக்குக் கீழே மீத்தேன் வாயு அபரிமிதமாக இருக்கிறது. அதை மக்கள் காஸ் சிலிண்டர் போல பாவித்து பயன்படுத்தி வருகின்றனர்.
மீத்தேன் வாயு காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர் கெட்டுப் போய் விட்டது. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் பரப்பளவுக்கு நல்ல தண்ணீர் கிடையாது. மேலும் இந்தப் பகுதியும் படு சூடாக இருக்கும் எப்போதும்.
இந்தப் பகுதியில் மீத்தேன் வாயுவைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனராம். ஆனாலும் இன்னும் முழுமையாக முடியவில்லை என்கிறார்கள்.
அப்ப அதுவரைக்கும் சிலிண்டர் தேவை இந்த ஊர் மக்களுக்கு இல்லை.