சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்.. சிறப்பு விருந்தினர்களை போல தடபுடலாக வரவேற்ற ஒடிஷா அரசு
புவனேஸ்வர்: கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களை ஒடிஷா அரசு அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர்.
கொரோனாவை தடுக்க லாக்டவுன் மேலும் 2 வார காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 40 நாட்களாக பிற மாநிலங்களில் தவித்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
ரயில் கட்டண விவகாரம்
இத்தகைய சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. ஆகையால் கட்டணமே இல்லாமல் அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சில மாநில அரசுகளே இந்த கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
தடபுடல் ஏற்பாடுகள்
இந்த நிலையில் பிற மாநிலங்களில் இருந்து ஒடிஷாவுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ரயிலில் இருந்து தொழிலாளர்கள் இறங்கிய உடன் அவர்களை அப்பகுதியின் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
அனைவராலும் பாராட்டு
அவர்களை வரவேற்கும் வகையில் ரயில் நிலையங்களில் கார்பெட்டுகள், பலூன்கள் கட்டப்பட்டு சிறப்பு விருந்தினர்களுக்கான மரியாதை அளிக்கப்படுகிறது. அனைவரும் தனிநபர் இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அனைவருக்கும் முதல் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கான பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையுமே மாநில அரசே ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. இது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
ஏற்பாட்டுக்கான காரணம்
இது தொடர்பான புகைப்படங்களை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர். பாலகிருஷ்ணன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அவர் தமது ஃபேஸ்புக் பதிவில், அசாதாரண சூழல்- அசாதாரண அவநம்பிக்கை- அதனால் தான் கலெக்டர் எஸ்.பி போன்ற உயரதிகாரிகள் நேரில் வரவேற்றார்கள்... உழைப்பாளிகளால் தான் இந்த உலகம் சுழல்கிறது எனபெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.