உத்தரப்பிரதேச தேர்தல்: அகிலேஷ் யாதவுக்கு 'கை' கொடுக்கும் மம்தா.. பாஜகவை விரட்டியடிப்போம் என உறுதி
கொல்கத்தா: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று மிக தீவிரமாக இருக்கிறது.

உத்தரப்பிரதேச தேர்தல்
எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.

அகிலேஷ் யாதவை ஆதரித்து பிரசாரம்
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மம்தா பானர்ஜி கட்சியினர் மத்தியில் பேசுகையில், 'உத்தரப்பிரதேசத்தில், நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் வருகிற 8-ம் தேதி நான் அகிலேஷ் யாதவை ஆதரித்து பிரசாரம் செய்ய போகிறேன்' என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் உத்தரப் பிரதேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறினார்.

பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்
மேலும் பேசிய அவர் கூறுகையில், 'கோவாவில் நமது யூனிட்டை உருவாக்கியுள்ளோம், திரிபுராவில் நமது வாக்கு சதவீதம் 20%-க்கு மேல் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 2 ஆண்டுகளில் வங்காளத்தை வலிமையாக்க வேண்டும், இதன் மூலம் 42 இடங்களையும் பெறுவோம் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும். டிஎம்சியில் ஒற்றுமை இருக்கும்; எனது முதல் செயற்குழு கூட்டத்தை டெல்லியில் நடத்துவேன்.

சண்டையிட மாட்டோம்
நமது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தங்களுக்குள் சண்டையிட மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். உட்கட்சி பூசலை சகித்துக்கொள்ள முடியாது. கட்சிக்குள் இருக்கும் பல்வேறு குழுக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. திரிணாமுல் காங்கிரஸில் வெவ்வேறு குழுக்கள் இல்லை, கட்சி ஒன்றுபட்ட குழுவாகும்' இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.












Click it and Unblock the Notifications