நீண்ட இழுபறிக்குப் பின் கர்நாடகா கொடுத்த நிவாரண நிதியை பெற்றது தமிழக அரசு!
பெங்களூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கான நிவாரண நிதியாக கர்நாடகா அரசு அறிவித்த ரூ5 கோடி நிதியை நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக அரசு பெற்றுக் கொண்டாக அம்மாநில தலைமைச் செயலர் கவுசிக் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கனமழை, வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் உருக்குலைந்து போயுள்ளன. அடையாறு, கூவம் ஆறுகளில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம் சென்னையையே மூழ்கடித்தது.

மத்திய அரசிடம் கேட்டதும் கிடைத்ததும்
கடந்த கனமழைக்கே மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ8,000 கோடி நிதி உதவி கோரியது. இதற்கு மத்திய அரசு ரூ 940 கோடிதான் கொடுத்தது. பின்னர் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா ரூ5,000 கோடி நிதி உதவி கோரியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி ரூ1,000 கோடி நிதி உதவியை அறிவித்தார்.

மாநிலங்கள் நிதி உதவி
இந்நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக கர்நாடகா அரசுதான் முதன் முதலாக ரூ5 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பீகார், ஒடிஷா மாநிலங்களும் தலா ரூ5 கோடி நிதி உதவியை அறிவித்தன.

பீகார், ஒடிஷா முதல்வர்களுக்கு நன்றி
இதில் பீகார், ஒடிஷா மாநில நிதி உதவியைப் பெற்றதாகவும் அதற்கு நன்றி தெரிவித்தும் அம்மாநில முதல்வர்களுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். கர்நாடகா அரசு அளித்த நிதியை கர்நாடகா அரசு பெற மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கர்நாடகா நிதி ஏற்க மறுப்பா?
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்ததால் அதிருப்தி அடைந்து இந்த நிவாரண நிதியை பெற தமிழக அரசு மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் விமர்சனங்களும் முனைக்கப்பட்டன.

கர்நாடகா நிதியை ஏற்றது தமிழகம்
ஆனால் உரிய முறைப்படியாக நிவாரண நிதியை கர்நாடகா வழங்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே தங்களது நிதி உதவியை தமிழக அரசு பெற்றுக் கொண்டதாக கர்நாடகா அரசின் தலைமை செயலர் கவுசிக் முகர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications