தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அளவு எக்கச்சக்கம்! - இது கேரள ரிப்போர்ட்
திருவனந்தபுரம்: தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்து 4 மடங்கு அதிகமாக உள்ளதாக தமிழக அரசிடம் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் டி.வி.அனுபமா, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் அண்டை மாநிலங்களிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன.
எனவே தமிழகத்தின் நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காய்கறிகளை விளைவிக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியிருக்கிறது," என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக விவாதிக்க இரு மாநிலச் செயலர்கள் நிலையிலான கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications