டோல்கேட்கள் மீதான தாக்குதல்: ராஜ் தாக்கரே விரைவில் கைது?
மும்பை: டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில் நவநிர்மாண் கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே விரைவில் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளை நவ நிர்மாண் கட்சியினர் அடித்து நொறுக்கி வருகின்றனர். வன்முறையை தூண்டியதாக நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை தனியார் பங்களிப்புடன் சாலைகளை அமைத்து வருகிறது. இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க சாலைகளில் குறிப்பிட்ட தூரங்களுக்கு இடையில் டோல் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையின் தூரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை செலுத்தப்படும் கட்டணம் 24 மணி நேரம் வரை செல்லுபடியாகும். அதன் பின்னர் சாலையை பயன்படுத்தினால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதில் வெளிப்படையான தன்மை இல்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் பிரச்னை தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, டோல் பூத்களில் கட்டணம் செலுத்த வேண்டாம் என தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் என தனது தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.
இதை தொடர்ந்து மும்பை, புனே நெடுஞ்சாலைகளில் உள்ள பல டோல் பூத்களை ராஜ்தாக்கரே கட்சியினர் அடித்து நொறுக்கினர். இந்த திடீர் தாக்குதலை போலீஸார் எதிர்பார்க்க வில்லை. மிக தாமதமாக அவர்கள் செயல்பட்டு அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மும்பையில் பந்தரா-வொர்லி இடையே கடல் வழியாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் செவ்வாய்கிழமை தாக்கப்பட்டது.
ராஜ்தாக்ரே கட்சியை சேர்ந்த 25 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். முந்தைய தாக்குதலில் காரணமாக உஷாராக இருந்த போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் அனைவர் மீதும் கலவரம் செய்தல் பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கலவரத்தை தூண்டியதாக நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீதும் இரண்டு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்று மாலைக்குள் ராஜ்தாக்கரே கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.