போதையில் தள்ளாடும் தெலுங்கு திரையுலகம்.. ரவி தேஜா உட்பட 15 முன்னணி நடிகர்களுக்கு சிக்கல்!
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளம் நடிகர்கள் 15 பேருக்கு தெலங்கானா போதைப்பொருள் ஒழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதராபாத் : இளம் முன்னணி தெலுங்கு நடிகர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவர்கள் நேரில் விளக்கமளிக்குமாறும் போதைப்பொருள் ஒழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரைப்பட இயக்குனர் அல்லு அரவிந்த் அண்மையில் முன்னணி சினிமா நடிகர் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். அதில் 10 இளம் தெலுங்கு நட்சத்திரங்கள் டோலிவுட்டின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நடிகர்களால் ஏற்படும் தாக்கங்களை சினிமாத்துறையும், அரசும் உற்றுநோக்கி வருவதாகவும் அல்லு அரவிந்த் தெரிவித்திருந்தார். மும்பை சினிமா உலகில் இருந்து தெலுங்கு திரையுலகிற்கு பரவியிருக்கும் போதைப்பொருள் பழக்கம் வாழ்க்கைக்கே உலை வைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
நடிகர்களுக்கு சம்மன்
இந்நிலையில் தெலங்கானா போதைப்பொருள் ஒழிப்பு அமலாக்கத் துறை தெலுங்கு சினிமாத் துறையை சேர்ந்த 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மன் அளிக்கப்பட்டுள்ள நடிகர்கள் ஜூலை 19 முதல் ஜூலை 27 வரை சிறப்பு விசாரணைக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்போனால் சிக்கிய நடிகர்கள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெலுங்கு நடிகர்கள் அதிகாரிகள் பிடியில் சிக்கியுள்ளனர். பிரபல நடிகர் ரவி தேஜா உள்பட 15 செலப்ரிட்டிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியமளிக்கும் விஷயம்.
இளம் பிரபலங்கள் யார் யார்?
ரவி தேஜா தவிர பூரி ஜெகந்நதாத், சுப்ரம்ராஜு, பாடகர் கீதா மாதுரியின் கணவர் நந்து, தனிஷ், நவ்தீப், சார்மி, முமைத் கான் மற்றும் பலரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சில நடிகர்கள் தங்கள் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதி கோரியுள்ளனர், ஆனால் இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
விரைவில் அறிவிப்பு
இவர்களுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதே தவிர இது வரை இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர்களின் பெயர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறுப்படுகிறது.