"ஹாய், பை" வேண்டாம்.. பெத்தவங்க காலில் விழுங்க அது போதும்.. ராஜ்நாத் சிங் "அட்வைஸ்"!
லக்னோ: இளம் தலைமுறையினர் தங்களது பெற்றோர் காலில் விழுந்து அவர்களின் ஆசியைப் பெற முயல வேண்டும். மாறாக ஹாய், பை என்று சொல்லும் மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
லக்னோ பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது இந்த அறிவுரையை அவர் கூறினார்.
ராஜ்நாத் சிங்கின் பேச்சிலிருந்து:
கிரகணத்தை அறிய எதற்கு அமெரிக்கா!
ஊடகங்களில் வரும் செய்திகள் பல சமயங்களில் நம்மைக் குழப்புகின்றன. சூரிய கிரகணம் குறித்தும், சந்திர கிரகணம் குறித்தும் அமெரிக்கா சொல்வதை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள். அதற்கு எதற்கு நாம் அமெரிக்காவுக்குப் போக வேண்டும். நமது முன்னோர்களே அதைத் தெளிவாக சொல்லி வைத்துள்ளனர். ஒரு ஜோதிடர் போதாதா, அதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள.
பஞ்சாங்கத்தைப் பாருங்க தெரியும்
பஞ்சாங்கத்தைப் பார்த்தாலே கிரகணம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து விடப் போகிறது. 100 வருடங்களுக்கு முன்பு நடந்த கிரகணம் குறித்தும், 100 வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போவது குறித்தும் அதில் தெளிவாக சொல்லியுள்ளார்களே. இதை விட வேறு என்ன வேண்டும்.
நமது பங்களிப்பு அதிகம்
அறிவியல், கணிதம், ஜோதிடத்திற்கு நமது பண்டைய இந்தியர்கள் அளித்துள்ள பங்களிப்பு மிகப் பெரியது. பாராட்டுக்குரியது.
பூமியின் பிறப்பை அன்றே சொன்னது நாம்தான்
பூமியானது 1.96 அராப் வருடங்களுக்கு முன்பே இருந்தது என்று நமது முனிவர்கள் தெளிவாகக் கூறி வைத்துள்ளனர். ஆனால் இதை அறிவியல் முதலில் ஏற்கவில்லை. ஆனால் பின்னர் ஒத்துக் கொண்டது.
இந்தியாவை விட அறிவான நாடு வேறு எதுவும் இல்லை
இந்தியாவைப் போல ஞானத்தில் சிறந்த நாடு வேறு எதுவும் கிடையாது. திரிகோணமெட்ரி, அல்ஜீப்ரா போன்றவ அதற்கு சிறந்த உதாரணம்.
பாரம்பரியத்தை மறந்தால் அறிவு போய் விடும்
பாரம்பரிய மதிப்பீடுகளை விட்டு விலகினால் ஞானம் போய் விடும். அழிவுதான் மிஞ்சும். பாரம்பரியத்தை விட்டும், மதிப்பீடுகளை விட்டும் விலகிச் செல்லும் நாகரீகம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. உலகம் ஒரு குடும்பம் என்ற மிகப் பெரிய செய்தியைக் கொடுத்தது நமது நாடுதான்.
ஹாய் சொல்லாதீங்க
ஹாய், பை கலாச்சாரத்தை விட்டு இளம் தலைமுறையினர் வெளியே வர வேண்டும். மாறாக நமது பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோர், மூத்தோரின் காலைத் தொட்டு வணங்கி ஆசிகளைப் பெற வேண்டும்.
அப்பா அம்மாவுக்கும் ஹாய்தானா...!
இன்றைய இளைஞர்கள் தந்தை தாயிடமும் கூட ஹாய் சொல்லித்தான் பேசுகிறார்கள். அதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அது மரியாதை அல்ல. மாறாக கால்களைத் தொட்டு வணங்க வேண்டும். அதுதான் உண்மையான மரியாதை. பாரம்பரியம் என்றார் சிங்.