“சீட் பெல்ட்” சரியில்லையாம் - 29 லட்சம் கார்களைத் திரும்பப் பெறும் டோயோட்டா
டெல்லி: டோயோட்டா நிறுவனத் தயாரிப்பான எஸ்.யூ.வி மாடல் கார்களின் சீட் பெல்ட்டில் குறைபாடு இருப்பதால் கிட்டதட்ட 29 லட்சம் கார்களை திரும்ப பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆர்.ஏவி4 எஸ்யூவிஎஸ் மாடல் 2005 முதல் 2014 வரையிலான மாடல்கள், வட அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 2012 முதல் 20014 வரையில் விற்பனை செய்யப்பட்ட ஆர்.ஏ.வி எலக்ட்ரிக் வாகனங்கள், 2005-2016 வரையில் ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் போன்றவைகளை திரும்ப பெறவுள்ளதாக டோயாட்டா தெரிவித்துள்ளது.
மேற்கண்ட ரக கார்களின் இரண்டாவது வரிசையின் ஜன்னலோர இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்கள் கோர விபத்தின் போது, குஷன் பிஃரேம் பொருத்தப்பட்ட மெட்டல் இருக்கைகளை உரசும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு நடைபெற்றால் பெல்ட்கள் துண்டிக்கப்பட்டு பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே திரும்ப பெறும் கார்களில், உலோக சட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களை எந்த கட்டணமும் இன்றி இலவசமாக பொருத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் 625,000 கார்களும், சீனாவில் 434000 கார்களும், ஜப்பானில் 177000 கார்கள் திரும்ப பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.