ம.பி.யில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு: 8 தொகுதிகளையும் பாஜக வெல்வது கடினமாம்!
தேவாஸ்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 8 லோக்சபா தொகுதிகளையும் கடந்த முறை கைப்பற்றியது போல் இம்முறை பாஜகவால் சாதிக்க முடியாது என்கின்றன கள நிலவரங்கள்.
மத்திய பிரதேசத்தின் மால்வா- நிமாட் பிராந்தியத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உஜ்ஜைய்ன், ரட்லம், தேவாஸ், தார், கார்கோன், இந்தூர், கண்ட்வா மற்றும் மாண்டசோர் ஆகிய 8 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள். இதில் 10 தனித் தொகுதிகளாகும். இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 8-ல் 5 தனித் தொகுதிகள். கடந்த 2014 தேர்தலில் இந்த 8 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெற்றிக்காக பகீரத பிரயத்தனம் செய்தன. பிரதமர் மோடியும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும் ரட்லத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தியிருந்தது காங்கிரஸ்.
பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?
குறிப்பாக மால்வா-நிமாட் பிராந்தியத்தில் காங்கிரஸ் 35 தொகுதிகளையும் பாஜக 28 தொகுதிகளையும் கைப்பற்றின. அதற்கு முந்தைய தேர்தலில் இதே பகுதியில் மொத்தம் உள்ள 66 சட்டசபை தொகுதிகளில் பாஜக 56 இடங்களை கைப்பற்றியிருந்தது.
விவசாயிகள் பிரச்சனை, பழங்குடிகளின் நில உரிமை விவகாரம்தான் இத்தேர்தலில் பிரதான பிரச்சனைகள். செல்வாக்கை தொலைத்துவிட்டு நிற்கும் பாஜக இம்முறை நிச்சயம் 8 தொகுதிகளையும் கைப்பற்ற முடியாது என்றே கூறப்படுகிறது.