நாடாளுமன்றக் கன்னிப் பேச்சில் கலக்கிய நேதாஜியின் கொள்ளுப் பேரன்!
புதன்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை கட்சி பாகுபாடின்றி அனைவரும் பாராட்டினர். சுகதா போஸ் வேறு யாருமல்ல, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதாவது கொள்ளுப் பேரன் முறை ஆகும்.
சுகதா போஸின் தந்தை சரத் சந்திர போஸ் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆவர். சுகதா போஸுக்குக் கிடைத்த பாராட்டால் திரினமூல் காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் மூழ்கியது.
மேலும் சுகதா போஸ் உரையாற்றியபோது அவைத் தலைவராக ரத்னா தே நாக் அவையை நடத்தினார் என்பதும் விசேஷமாக அமைந்தது.
அமெரிக்காவில் படித்தவர் சுகதா போஸ். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். நேற்றைய தனது முதல் பேச்சின்போது, நாட்டின் பல்வேறு பிரச்சினைகளையைும் தொட்டு எடுத்து வைத்து அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
அண்டை நாடுகளுடன் சுமூக உறவை வலுப்படுத்த வேண்டும், தலித்துகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர் நீண்ட உரையாற்றினார்.
தனது பேச்சின்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளையும், காஸி நஸ்ரூல் இஸ்லாம் ஆகியோரின் மேற்கோள்களையும் எடுத்துக் கூறத் தவறவில்லை சுகதா போஸ்.
மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தவர் ஊடுறுவல் குறித்த பிரச்சினை குறித்து சுகதா போஸ் குறிப்பிடுகையில், சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினையில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கு வங்கமும் திரினமூல் காங்கிரஸும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றார்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்ததைப் பாராட்டிய சுகதா போஸ், பிராந்தியப் பிரச்சினைகள், இந்தியாவின் உலகளாவிய பங்கை சீர்குலைப்பதாக அமைந்து விடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஜப்பானுடன் இந்தியா தனது உறவை வலுப்படுத்தும் அதே வேளையில் சீனாவுடனான உறவையும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
சீனாவின் எதிரியாக ஜப்பான் இருந்தாலும் கூட அதைச் சமாளித்து இரு நாடுகளுடனும் இந்தியா நட்புறவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் சுகதா போஸ் தெரிவித்தார்.
சுகதா போஸின் பேச்சால் அத்தனை உறுப்பினர்களும் அசந்து போய் விட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு படி மேலே போய் எழுந்து சென்று சுகதா போஸுக்கு கைகொடுத்து வாழ்த்தினார்.