பாஜக- திரிணமூல்- இடதுசாரிகள் இடையே மோதலுக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. அகர்தலா மற்றும் மற்ற மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 222 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல்கள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், திரிபுராவில் அமைதியை ஏற்படுத்த மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இது மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிபிஎம், சுயேட்சைகள் என 785 பேர் போட்டியிட்டுள்ளனர். அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் உள்ள 334 இடங்கள் மற்றும் மேலும் 19 நகர்ப்புற இடங்களில் பாஜக போட்டியின்றி 112 இடங்களில் வென்றுள்ளது.
இது போக மற்ற இடங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக 644 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்த தேர்தலில் அரசியல் கட்சியினரிடையே மேலும் மோதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 2018ஆம் ஆண்டில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் மாநகராட்சி தேர்தல் இதுவாகும். சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இன்றைய தினம் நடத்தப்படுகிறது.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். வரும் 2023 ஆம் ஆண்டு திரிபுரா மாநிலம் சட்டசபை தேர்தலை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க மறுப்பு- அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உச்சநீதிமன்றம் அறிவுரை
திரிபுரா முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாணிக் சர்கார் கடந்த 6ஆம் தேதி தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்ற போது பாஜகவினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பாஜகவினருக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அகர்தலாவில் உள்ள இடதுசாரிகளின் அலுவலகம் மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
அது போல் திரிபுரா மாநிலத்தில் ஹோவை மாவட்டத்தின் தெலியமுரா பகுதியில் பாஜகவினர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்டது. இதில் 19 பேர் காயமடைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.