இரட்டை இலைக்காக லஞ்சம்... தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், மல்லிகார்ஜூனன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை எப்படியாயினும் பெற்று விட வேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சுகேஷையும், டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோர் கடந்த 1-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவல் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்ற நீதிபதி பூனம் சௌதரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் தனக்கு ஜாமீன் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலையில் தினகரன் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications