டிவிட்டரில் புகார் தெரிவித்தால் பத்தே நிமிடத்தில் தீர்வு.. கலக்கும் பெங்களூரு போலீஸ் கமிஷனர்
பெங்களூரு: டிவிட் செய்த பத்தே நிமிடங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணும் அளவுக்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
போலீஸ் என்பது பொதுமக்களின் நண்பன் என்பது அலங்கார வார்த்தையாக உள்ளதே தவிர, பெரும்பான்மையான நேரங்களில் நிதர்சனம் கசப்பாகவே உள்ளதை பலரும் அனுபவித்திருப்பார்கள். குற்றவழக்குகளில் புகார் கொடுக்க சென்றவர் படும் அவஸ்தையாகட்டும், டிராபிக் போலீசாரின் கெடுபிடியாகட்டும் ஏதாவது ஒரு வகையில் போலீசாரால் பாதிக்கப்படாத நபர்கள் இந்திய திருநாட்டில் இருப்பது சொற்பமே.
இதற்கெல்லாம் காரணம், மேலதிகாரிகளுக்கு நடக்கும் விஷயங்கள் தெரியாது என்று கீழ் மட்டத்திலுள்ள சில போலீசார் நினைப்பதுதான். இதை உணர்ந்து கொண்டுள்ளார் பெங்களூர் போலீஸ் கமிஷனர். எனவேதான் பொதுமக்களுக்கும், தனக்கும் நடுவே எந்த தகவல் தொடர்பு தடையும் இருக்க கூடாது என்பதற்காக டிவிட்டரை ஆயுதமாக கையில் ஏந்தியுள்ளார்.
ஆம்.. பெங்களூரு போலீஸ் கமிஷனராக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட எம்.என்.ரெட்டி டிவிட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். எந்த புகாராக இருந்தாலும் டிவிட்டர் மூலமாக தனது கவனத்துக்கு கொண்டுவருமாறு அவர் விடுத்த கோரிக்கைகளுக்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது.
டிவிட்டர் மூலமாக கமிஷனருக்கு கிடைத்த தகவல்களை வைத்து, விபச்சாரம், போதை மருந்து கடத்தல், போலி சான்றிதழ் தயாரிப்பு, ஆள் கடத்தல், டிராபிக் போலீசாரின் கெடுபிடிகள் போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் குறித்த உளவுத் தகவல்களும் இதன் மூலம் கிடைத்துள்ளது. போனில் வதந்திகள் பரப்புவதை போல டிவிட்டரில் பொய் தகவல்கள் வருவதில்லையாம். போலீசாருக்கு கிடைப்பதெல்லாம் உண்மையான தகவல்கள்தானாம்.
போலீசாரின் வேகத்துக்கு ஒரு உதாரணம். அக்டோபர் 13ம்தேதி ஒரு நபர் கமிஷனருக்கு டிவிட் செய்து, வாகனம் ஓட்டிச்சென்ற தனது மனைவியை ஏர்போர்ட் ரோட்டில் டிராபிக் போலீசார் வழிமறித்து, லஞ்சம் கேட்பதாகவும், மனைவியிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு மெயில் மூலமாக தகவல் பறந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் புகார் சொன்ன நபரிடமிருந்து மற்றொரு டிவிட். "ரொம்ப நன்றி சார். எனது மனைவியை போலீசார் செல்ல விட்டுவிட்டனர்" என்று கூறியது அந்த டிவிட். பத்தே நிமிடத்தில் வேலை முடிந்தது.
கோர்ட், கேஸ் என இழுத்தடித்து புகார்களுடன் அலைவதற்கு பதிலாக, கமிஷனருக்கு ஒரு டிவிட் போதுமே என்கின்றனர் பெங்களூருவாசிகள். கமிஷனர் பிறப்பிக்கும் உத்தரவு செய்து முடிக்கப்பட்டதா என்பதை கண்காணிக்கவே, கமிஷனர் ஆபீசில் ஒரு பிரிவு செயல்படுகிறது என்பது தனிச்சிறப்பு. என்ன கண்ணுக்கு முன்பு அக்கிரமம் நடப்பதை பார்த்துக்கொண்டு பொறுக்க முடியவில்லையா. பெங்களூருவாசிகளே, இதோ @CPBlr இந்த டிவிட்டர் அக்கவுண்ட்டுக்கு போங்கள். புகாரை பதிவு செய்து சமூக கடமையாற்றுங்கள்.