காஷ்மீரில் ராகுலுக்கு எதிர்ப்பா?.. ஜம்முவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 6 பேர் படுகாயம்.. ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்முவில் இன்று இருவேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்குள் நேற்று நுழைந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் சூழலில், ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்து நடைபெறும் காங்கிரஸ் துணிச்சலாக அறிவித்துள்ளது.
சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்!
காஷ்மீரில் ராகுல் காந்தி
நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று காஷ்மீருக்குள் நுழைந்தார். காஷ்மீரில் நடைப்பயணத்தை முடித்துவிட்டு ஜம்முவுக்கு நாளை வருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, பதற்றம் நிறைந்த யூனியன் பிரதேசமான காஷ்மீருக்கு ராகுல் காந்தி வந்திருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ளது. அவருக்கு பாதுகாப்பு அளிக்க கூடுதல் கமாண்டோ படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இரட்டை குண்டுவெடிப்பு
இந்நிலையில், ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் இருவேறு இடங்களில் இன்று காலை 10.30 மணியளவில் இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அங்கிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் உடல் பாகங்களை இழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராகுல் வருகைக்கு எதிர்ப்பா?
காஷ்மீரின் சத்வால் பகுதியில் தற்போது ராகுல் காந்தி இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் இருந்து 60 கி.மீ. தூரத்தில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நாளை காஷ்மீருக்கு ராகுல் காந்தி வரும் நிலையில், இன்று அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாரும், ராணுவத்தினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் 'தில்' அறிவிப்பு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்த குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுதொடர்பாக காஷ்மீர் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். இத்தனை பாதுகாப்புக்கு மத்தியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்பது தெரியவில்லை. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் பொறுப்பு. என்ன நடந்தாலும், ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்டப்படி தொடரும்" எனக் கூறினார்.