வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி விபச்சாரம்: பெங்களூருவில் 11 பெண்கள் மீட்பு
பெங்களூரு: கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பல மாநில பெண்கள் 11பேரை பெங்களூரு போலீசார் வீடு ஒன்றில் இருந்து மீட்டனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டிக்கு, டிவிட்டர் மூலமாக பொதுமக்கள் புகார் தரும் வசதி உள்ளது. இந்நிலையில் டிவிட்டர் மூலமாக ஒரு நபர் நேற்று போலீஸ் கமிஷனருக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார். அதில், விவேக்நகர், ஈஜிபுரா பகுதியிலுள்ள கடம்பா என்ற பில்டிங்கில் விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து எம்.என்.ரெட்டி உத்தரவின்பேரில், நகர குற்றப்பிரிவு போலீசார் ஒரு குழுவுடன் சென்று அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு ரூமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் மற்றொரு ரூமில் அடைக்கப்பட்டிருந்த ஆறு பெண்களும் மீட்கப்பட்டனர். ஆக மொத்தம் 11 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதில் 3 பெண்கள் கொல்கத்தாவையும், 3 பேர் ஆந்திராவையும், மூவர் மும்பையையும் மற்ற இருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்களாகும். இவர்களை ராஜேஸ் தலைமையிலான விபச்சார கும்பல் கடத்தி வந்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஆள்கடத்தல், உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.