உச்ச நீதிமன்றத்தில் ரூபாய் நோட்டுக்கு எதிராக 2 புதிய மனுக்கள்.. டிச.2ல் விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 புதிய மனுக்கள் டிசம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
டெல்லி: அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு மாற்றப்படும் விவகாரத்தில் தங்களுக்கும் வாய்ப்பு வழங்கக் கோரி கேரள கூட்டுறவு வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உள்ளிட்ட புதிய 2 மனுக்கள் வரும் டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு திரும்பப்பெறற் நடவடிக்கைக்கு எதிராக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் இந்த 2 புதிய மனுக்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் வரும் 2-ஆம் தேதி விசாரிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்த்து ஏற்கெனவே பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகள் சார்பில் தங்களையும் வழக்கமான அரசு வங்கிகளைப் போல் செயல்பட அனுமதிக்குமாறு கோரி ஒரு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுயிருப்பதாவது:
மற்ற வங்கிகளைப் போல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதற்கு கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது பாரபட்சமானது. ஏனெனில், கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படியே செயல்படுகிறது.
எனவே, ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர எங்களுக்கும் அதிகாரமளித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், பிரபல வழக்குரைஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாயவும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரூ.100-க்கு மேல் மதிப்பு கொண்ட அனைத்து ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். ஊழலை ஒழிக்கவும், கருப்புப் பணப் புழக்கம், பயங்கரவாதம், கடத்தல், லஞ்சம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் இது அவசியமாகும். இதற்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று உபாத்யாய அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த 2 புதிய மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான பெஞ்ச் முன் செய்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்த்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் இந்த 2 மனுக்களையும் இணைத்து வரும் 2-ஆம் தேதி (டிசம்பர் 2) விசாரிப்பதாக நீதிபகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் மத்திய அரசு நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த முடியாமல் திணறி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்திலும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவது மத்திய அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.