மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப் பதிவு
மும்பை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில் ஹரியானா மாநில சட்டசபையின் 90 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு அமைந்த பிறகு காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு பொதுத்தேர்தல் நடப்பதால், இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி பிரசாரம்
மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரமாக அனல் பறந்த பிரசாரம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் 20 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
சோனியா, ராகுல்
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.
வாக்கு வேட்டை
இறுதி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி 3 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாநில தலைவர்களும், வேட்பாளர்களும் போட்டி, போட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
ஹரியானாவிலும் பிரசாரம் ஓய்வு
அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. ஹரியானா மாநிலத்திலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இம்மாநிலத்தில் பிரதமர் மோடி 10 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பரபரப்பை ஏற்படுத்திய சவுதாலா
ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீனில் வெளிவந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய அவரை சரண் அடைய உத்தரவிட்ட நீதிமன்றம் சிறையில் அடைத்தது. இது ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளை வாக்குப் பதிவு
மகாராஷ்டிரா, ஹரியானா இரு மாநிலங்களிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.