வாங்க சேர்ந்து போகலாம்: பெங்களூரில் கார்பூலிங் சேவையை அறிமுகம் செய்யும் உபேர்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உபேர் டாக்சி நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
பெங்களூர் பூங்கா நகரம் என்பதை விட போக்குவரத்து நெரிசல் நகரம் எனலாம். அந்த அளவுக்கு பெங்களூரில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உபேர் டாக்சி நிறுவனம் கார்பூலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய திட்டம் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கார்பூலிங் என்றால் ஒரே வழியில் செல்லும் இருவர் சேர்ந்து ஒரே டாக்சியில் செல்லலாம். அதாவது, நீங்கள் இந்திரா நகரில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உபேர் டாக்சியில் ஏறியதும் அதே வழியாக செல்லும் மற்றொருவரை உங்களுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு சென்றால் பயண கட்டணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செலவு குறையும். பெங்களூரில் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்துக் கொண்டு பிற நகரங்களிலும் இத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது உபேர்.
பெங்களூர் தெருக்களில் பெரிய பெரிய கார்கள், டாக்சிகளில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் நிலையில் உபேர் இந்த திட்டத்தை அறிமுகம் செய்கிறது. கார்பூலிங் சேவை தற்போது சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பாஸ்டன், ஆஸ்டின் மற்றும் பாரீஸ் ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது.
ஓலா கேப்ஸ் நிறுவனமும் விரைவில் கார் பூலிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.