கருவில் உள்ள 29 வார சிசுவிற்கு இதய ஆபரேஷன்.. கேரள டாக்டர்கள் சாதனை
திருவனந்தபுரம்: கருவில் உள்ள 29 வார சிசுவிற்கு வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர் கேரள மருத்துவர்கள்.
கேரள மாநிலம் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழக மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை "அயார்டிக் வால்வுலோப்ளாஸ்டி" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தாயின் கருவில் 29 வார சிசுவாக இருக்கும் அந்தக் குழந்தைக்கு இதயத்தில் சிறு குறைபாடு இருப்பதை சமீபத்தில் டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் அடைபட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் இருந்தது. அதனைத் தொடர்ந்து மிகவும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
இந்த அறுவைச் சிகிச்சையானது டாக்டர் பாலு வைத்தியநாதன் என்பவரது தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி வரும் வாரங்களில் கரு நன்றாக வளர்ச்சியடைந்து, நல்ல படியாக பிரசவம் நடைபெறும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.