"அங்கிள் ஜி.." ஆளுநரை விடாமல் விரட்டும் திரிணாமுல் எம்.பி.. மேற்கு வங்கத்தில் உச்சகட்ட உரசல்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் இடையேயான மோதல் புது உச்சத்தை அடைந்துள்ளது.
டுவிட்டரில் இருவரும் வெளிப்படையாக காட்டமான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆளுநர் மாளிகைக்காக சிறப்பு பணி அதிகாரிகளை நியமித்துள்ளார். ஆனால் அவர்களில் 6 பேர் ஆளுநரின் உறவுக்காரர்கள் என்பது மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு.
அமைதியாகிவிட மாட்டேன்.. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய மஹுவா மொய்த்ரா.. கொதிக்கும் பாஜக எம்பிக்கள்
தப்பானது
இதற்கு பதிலளித்த, ஆளுநர், மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியபடி, 6 பேர் எனது உறவினர்கள் என்பது தவறானது. சிறப்பு பணி அதிகாரிகள் 3 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 4 பேர் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். யாருமே எனது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களஅ இல்லை. ஏனெனில் 4 பேர் எனது ஜாதியினர் கூட கிடையாது. இவ்வாறு ஒரு விளக்கத்தை கொடுத்தார்.
பூர்வீகம் என்ன
ஆனால் விடவில்லை, மஹுவா மொய்த்ரா. அடுத்த டுவிட்டர் பதிவில் முன்பைவிட இறங்கிச் சென்று அடித்துள்ளார் அவர்.
நியமனம் செய்யப்பட்டவர்களின் பூர்வீகம் என்ன, ஒவ்வொருவரும் எப்படி ராஜ் பவனுக்குள் வந்தனர் என்பதை இங்கேயே "அங்கிள் ஜி"யிடம் கேட்கிறேன். உடனே அதைச் செய்யுங்கள். பிஜேபி ஐடி பிரிவு உங்களை இந்த ஒரு பிரச்சினையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவர முடியாது. இந்தியாவின் துணை ஜனாதிபதியும் உங்களுக்கு உதவுவார் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
அங்கிள் ஜி
ஆளுநரைத் தான் அங்கிள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாஜக ஆதரவு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் உள்ள மோசமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப, இதுபோல சர்ச்சை கிளப்பப்படுவதாக ஆளுநர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு, மஹுவா மொய்த்ரா பதிலளிக்கும்போதும், அங்கிள் ஜி என்றுதான் குறிப்பிட்டார்.
மேற்கு வங்க மோதல்
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து மே மாதம் 2ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளோடு, முடிவுகள் வெளியாகின. மீண்டும் அங்கு மமதா பானர்ஜி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. ஆனால் பாஜக-திரிணாமுல் காங்கிரசின் மோதல்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. சமீபத்தில் புயல் நிவாரணத்தை பார்வையிட சென்ர பிரதமர் நரேந்திர மோடியை காக்க வைத்துவிட்டதாக மமதா பானர்ஜியை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஆளுநர் செய்த நியமனங்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.