தெலுங்கானா மசோதாவுக்கு சிறப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- ஹைதராபாத் பொதுதலைநகர்!
தெலுங்கானா தனி மாநில மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்தது. அதனால் அந்த மசோதா ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு, மாநில சட்டசபையின் ஒப்புதல் இன்றி தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்
இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய மசோதாவில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வரும் 12ந் தேதி ராஜ்யசபாவில் தற்போதைய வடிவிலேயே தாக்கல் செய்யவும், அதன் மீது விவாதம் வரும் போது அதில் மேற்கொள்ள வேண்டிய 32 திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள இம் மசோதாவில் ஹைதராபாத் நகரம் தெலுங்கானவுக்கும், சீமாந்திராவுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுவான தலைநகரமாக செயல்படும்.
காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்
இக் கூட்டம் முடிவடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலரும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தெலுங்கானா விவகாரதில் தற்போதைய நிலையை விளக்கினார்.