மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தான்வே ராஜினாமா! மகா. பா.ஜ.க. தலைவரானதால் விலகல்!
டெல்லி: மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் தான்வே தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் தலைவரானதால் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தான்வே கூறினார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார்.
இதனைத் தொடர்ந்து அம்மாநில பாரதிய ஜனதா தலைவராக மத்திய இணை அமைச்சர் தான்வே நியமிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் தான்வே தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான்வே தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தான்வே ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தான்வே, பாரதிய ஜனதாவின் மகாராஷ்டிரா மாநில தலைவராக இருப்பதால்தான் ராஜினாமா செய்தேன். இதில் எவருடைய நிர்பந்தமும் இல்லை என்றார்.