உத்தர பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் விபத்து... பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
உ.பி.,யில் அனல்மின்நிலையத்தில் பாய்லர் வெடித்த சம்பவம்... பலி எண்ணிக்கை உயர்ந்தது.....
ரேபரேலி : உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி உன்சஹாரில் என்.டி.பி.சி.,க்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் நேற்று 6-வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்கட்ட விசாரணையில், பாய்லரின் அடிப்பகுதியில் சாம்பல் அளவுக்கு அதிகமாக சேர்ந்ததால், அழுத்தம் ஏற்பட்டு வெடித்து உள்ளது என்று தேசிய அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கிறார்கள்.
விபத்து சமயத்தில் அதிகமான பணியாளர்கள் அங்கு இருந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் பலியானவர்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்தகட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1550 மெகா வாட் திறன் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தால் ஒன்பது மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த விபத்து மூலம் மின்சார உற்பத்தியில் பாதிப்பு எதுவும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து நரேந்திர மோடி ட்விட்டரில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். மேலும், இன்று காலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ராகுல் காந்தி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications