மக்களவைத் தேர்தல் 2014: மத்தியில் ஆட்சியமைப்பதை முடிவு செய்யும் கிங் மேக்கர் யார்?
டெல்லி: இந்தியாவிலே 80 எம்.பி. தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 49 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக காங்கிரஸ் மாநிலத்தில் காங்கிரசுக்கு 4 இடங்களே கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வட இந்தியாவில் பாஜக ஆதிக்கம் தென்பட்டாலும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே தென்படுகிறது. எனினும் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கப்போகும் கிங்மேக்கராக மாநிலக் கட்சித் தலைவர்களே இருப்பார்கள் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கிடைக்கும் என்பது போலவே கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன.
காங்கிரஸ் எதிர்ப்பலை
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள், விலைவாசி உயர்வு மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக மத்திய அரசு மீது நாடெங்கும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மோடி அலை
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. மோடிக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மோடி அலை வீசுகிறது. அதை சரிகட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஊடகங்களின் அட்டாக்
வடஇந்திய ஊடகங்களில் பலவும் பாஜகவிற்கு ஆதரவான செய்திகளே வெளியாகின்றன. ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க அக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்பு
2014ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதைப் பற்றி ஹெட்லைன்ஸ் டுடே, சி-வோட்டர், மற்றும் சி.என்.என்.-ஐ.பி.என் ஆகிய மூன்று நிறுவனங்களும் கருத்து கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.
பாஜகவிற்கு சாதகம்
இந்த கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு படுவீழ்ச்சி கிடைக்கும் என்று 3 கருத்து கணிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது.
தொங்கு நாடாளுமன்றம்
ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 272 இடங்களான மெஜாரிட்டி பலம் கிடைக்காது என்பது கருத்து கணிப்புகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொங்கு நாடாளுமன்றமே அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு
இந்திய டுடே நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 212 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது. அக்கட்சி கட்சி கடந்த தேர்தலை விட இந்தமுறை சுமார் 150 இடங்களை பறி கொடுக்கும் என்று அதில் தெரிய வந்தது. மாநில கட்சிகள் 228 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாஜக 188 இடங்கள்
ஹெட்லைன்ஸ் டுடே நடத்திய கருத்து கணிப்பில், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகபட்சமாக 217 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 108 இடங்களே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படு வீழ்ச்சியில் காங்கிரஸ்
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை அது 115 இடங்களை இழக்கும் என்று சி-வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
தென் இந்தியாவில்
ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்புகளில் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் காங்கிரசுக்கு பலத்த அடி விழும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தென் இந்தியாவில் காங்கிரசுக்கு சாதகமான முடிவுகள் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உ.பியில் பாஜக
குறிப்பாக இந்தியாவிலே அதிக எம்.பி. தொகுதிகளை (80) கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி 49 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 4
உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு வெறும் 4 இடங்களே கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
முலாயம் சிங் யாதவ்
உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். ஆனால் அவருக்கு 15 இடங்கள் வரையே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாயவதிக்கு 15
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் 15 இடங்களில்தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களை பெற்றுக் கொடுப்பதாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரிகிறது.
4 மடங்கு வெற்றி
பாரதீய ஜனதா கட்சிக்கு கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 10 இடங்களே கிடைத்திருந்தது. அது வரும் தேர்தலில் 4 மடங்கு உயர்வதால் பா.ஜ.க. அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் லாபம் பெறும்.
பீகாரில் பாஜக
பீகார் மாநிலத்திலும் பா.ஜ.க. அதிக இடங்களில் அதாவது 22 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்கள் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநில கட்சித்தலைவர் பிரதமர்?
ஏ.பி.பி. நியூஸ் - நீல்சன் நடத்திய கருத்து கணிப்புகளிலும் உத்தரபிரதேசம், பீகாரில் பா.ஜ.க.வே அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு அணிகளிலும் இடம் பெறாத மாநில கட்சிகள் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த தடவை அந்த எண்ணிக்கை 223 முதல் 233 இடங்கள் வரை உயரும் என்று பல்வேறு கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
கிங் மேக்கர் யார்?
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் மாநில கட்சிகள் கூடுதலாக 103 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
மேலும் மத்தியில் ஆட்சி அமைவதை முடிவு செய்யும் ‘‘கிங்மேக்கர்'' ஆக மாநில கட்சிகள் திகழும் என்பது இந்த கருத்து கணிப்புகள் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளின் கனவை சிதைப்பதாக உள்ளது இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்.