தெலுங்கானா மசோதா- தொடரும் அமளி- ஆந்திர சட்டசபை செய்யப் போவது என்ன?
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில மசோதாவால் ஆந்திர சட்டசபையில் அமளி தொடர்கிறது. இந்நிலையில் இம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தாமல் எம்.எல்.ஏக்களின் கருத்துகளை மட்டுமே அனுப்புவது என ஆந்திர சட்டசபை சபாநாயகர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
10 மாவட்டங்களுடன் கூடிய தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதா தற்போது ஆந்திரா சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் குறிப்பில், இம்மசோதா மீது எம்.எல்.ஏக்களின் "கருத்துகளை" அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
வாக்கெடுப்பு தேவை
தற்போது ஆந்திர மாநில சட்டசபையானது இந்த விவகாரத்தில் அமளி துமளியாகிக் கொண்டிருக்கிறது. இம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டாக வேண்டும் என்று சீமாந்திரா எம்.எல்.ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.
சீமாந்திரா எம்.எல்.ஏக்கள் அதிகம்
ஆனால் தற்போதைய நிலையில் ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நிச்சயம் அது தோல்வியடையும். ஏனெனில் தெலுங்கானா எம்.எல்.ஏக்களை விட சீமாந்திரா எம்.எல்.ஏக்கள் அதிகம் என்பதுதான்.
தவிர்க்க ஒரே வழி
இந்த நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில்தான் தெலுங்கானா மசோதா மீது எம்.எல்.ஏக்களின் கருத்துகளை அனுப்பி வைக்கவும் ஜனாதிபதி கோரியிருக்கிறார்.
அரசியல் சட்டம் அனுமதி
ஒரு மாநிலத்தைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க அம்மாநிலத்தின் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்பது அவசியம் இல்லை. அரசியல் சட்டப் பிரிவு 3-ன் படி மத்திய அரசே இதை தீர்மானிக்கலாம். தற்போது தெலுங்கானா விவகாரத்திலும் இந்தப் பிரிவையே மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது.
சிக்கல் இல்லாமல் இருக்க..
இருப்பினும் சட்ட சிக்கல் இல்லாமல் இருக்கவே அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களின் கருத்துகளை சபாநாயகர் கோர இருக்கிறார். அதாவது சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தெரிவிக்கும் கருத்தே அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்தாக கொள்ளப்படும். அதேபோல்தான் தெலுங்கானாவின் டி.ஆர்.எஸ்.எம்.எல்.ஏ தெரிவிக்கும் கருத்தே தெலுங்கானா டி.ஆர்.எம்.எல்.ஏக்கள் அனைவரது கருத்தாகவும் கொள்ளப்படும். இப்படி அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்தைப் பெற்று அதை ஜனாதிபதிக்கு அனுப்ப சபாநாயகர் முடிவு செய்திருக்கிறார்.
மத்திய அரசே இறுதி முடிவு
அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டு இப்படி கருத்து கேட்டு அதை ஜனாதிபதிக்கு அனுப்புவது என்பது சம்பிரதாய நடவடிக்கை என்பதால் மத்திய அரசு திட்டமிட்டபடி அரசியல் சட்டம் 3வது பிரிவின் படி எந்த சிக்கலும் இன்றி தெலுங்கானா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறது.