எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: லோக்சபா நாளை வரை, ராஜ்யசபா 2 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா நாளை வரையும் ராஜ்ய சபா 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லோக் சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். ராஜ்யசபா தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தலித்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக கூறி பகுஜன்சமாஜ் கட்சி எம்பி மாயாவதியும் முழக்கமிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் எதிர்கட்சிகள் அமளியால் லோக் சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவைநிகழ்வுகளை ஒத்திவைத்து விவசாயிகளைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டதால் லோக் சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications