மோடியைத் தொடர்ந்து இன்று மம்தா பானர்ஜியைச் சந்திக்கிறார் நான்சி பவல்
டெல்லி: இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவல் இன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறார்.
கடந்த 13ம் தேதி குஜராத் தலைநகர் காந்திநகரில் அமாநில முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல்.
இந்த சந்திப்பின்போது, குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் நல்லதொரு நிர்வாகம், இணக்கமான முதலீட்டு சூழல், இருபது ஆண்டு காலமாக மாநிலம் கண்டு வரும் அபார வளர்ச்சி ஆகியவற்றுக்காக நரேந்திரமோடியைப் பாராட்டினார் நான்சி பவல்.
மோடி சந்திப்பைத் தொடர்ந்து நான்சி பவல் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க திட்டமிட்டார். இதுதொடர்பாக நான்சி பவல் அலுவலகத்தில் இருந்து மாநில சட்டசபைக்கு கடிதம் வந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநில அரசு முறைப்படி வெளியுறவுத் துறையிடம் இந்தச் சந்திப்பிற்கு அனுமதி கேட்கப் பட்டதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறார் நான்சி பவல். மம்தா பானர்ஜி சந்திப்பைத் தொடர்ந்து, நான்சி பவல் அம்மாநில கவர்னர் எம்.கே.நாராயணை சந்திக்க இருக்கிறார்.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மம்தா பானர்ஜியை சந்தித்தார் நான்சி பவல். அப்போது அமெரிக்கா முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. அதே வருடம் மே மாதம் ஹிலாரி கிளிண்டனும் மம்தாவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.