"மிக முக்கிய சந்திப்பு!" சவுதி இளவரசை சந்தித்தார் ஜோ பைடன்.. விரைவில் குறையும் கச்சா எண்ணெய் விலை?
ஜெட்டா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலத்தில் அவர் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும், ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றதும் நிலைமை மாறியது.
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடங்கிப் பல சந்தர்ப்பங்களில் அதிபர் பைடன் சவுதிக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடுகளையே எடுத்து இருந்தார்.

ஜோ பைடன்
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சற்று மோசம் அடைந்து இருந்தது. இந்தச் சூழலில் தான் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து உள்ளார். மனித உரிமை மீறல்கள் தடுப்பது, சர்வதேச நீர் ஏற்றுமதியை அதிகப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் அமெரிக்கா சார்பில் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரச்சினைகள்
இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து வலியுறுத்தியதாக பைடன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு அமெரிக்க அதிபராக மனித உரிமைகள் பிரச்சினையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது. எனக்கு தவறாகப்படும் விஷயங்கள் குறித்து நான் எப்போதும் குரல் கொடுப்பேன். கஷோகியின் மரணத்திற்குத் தாம் தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்று முகமது சல்மான் என்னிடம் கூறினார்" என்று பைடன் தெரிவித்தார்.

ஏன் முக்கியம்
பத்திரிக்கையாளர் கஷோகி படுகொலைக்குப் பின்னர், இளவரசர் முகமதுவிடம் பேச அதிபர் பைடன் நீண்ட காலமாக மறுத்துவிட்டார். ஆனால் ஈரானின் அணுசக்தி முயற்சிகள், உக்ரைன் போர் காரணமாக எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பிற காரணங்களால் இப்போது முகமது பின் சல்மானை பைடன் நேரில் சந்தித்து உள்ளார். மறுபுறம் சவுதியும் அமெரிக்காவுடனான தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்த விரும்புவதால் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது

கச்சா எண்ணெய்
தற்போது இருக்கும் சர்வதேச நிலையைக் கருத்தில் கொண்டே இரு தலைவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. செங்கடல் தீரான் தீவில் இருக்கும் அமெரிக்க அமைதிப்படை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என பைடன் இந்த சந்திப்பில் அறிவித்தார். இதன் மூலம் தீரான் தீவை சவுதியால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த முடியும். இருப்பினும் தீரான் தீவை விட்டு அமெரிக்கா வெளியேற இஸ்ரேல் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி அதிகரிக்கும்?
அதேபோல ஏமன் விவகாரத்தில் போர் நிறுத்தம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைடன் தெரிவித்தார். இவை அனைத்தையும்விட, சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே பைடனின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். OPEC+ நாடுகளின் ஒப்பந்தம் செப்டம்பரில் முடியும் நிலையில், அதன் பின்னர் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதிக்கு வெற்றி
அமெரிக்க அதிபர் பைடனின் சவுதி பயணம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உடனான தனது உறவை மேம்படுத்திக் கொள்ள பின் சல்மான் விரும்பிய நிலையில், அதற்கு இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் மனித உரிமை நெருக்கடி குறித்த பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு, முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று சவுதி நம்புகிறது.












Click it and Unblock the Notifications