"2017 மாடல்" ஞாபகம் இருக்கா.. ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. முட்டிமோதும் உ.பி
உபியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
கான்பூர்: வரப்போகும் உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றியே இப்போதைக்கு பிரதானமாக பார்க்கப்பட்டாலும், இனி அடுத்தடுத்த திருப்பங்கள் அந்த மாநிலத்தில் ஏற்படும் என்கிறார்கள்..!
உத்தரபிரதேச சட்டசபையின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.. பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகின்றன...
இதையடுத்து, பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பிரதான கட்சிகள் எல்லாம் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கும் கட்டாயத்துக்கும் ஆளாகி உள்ளனர்.
வெற்றி
நடக்க போகும் 5 மாநில தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரியது உத்தரபிரதேசம்தான்.. இந்த மாநிலத்தின் வெற்றியே தேசிய அரசியலை நிர்ணயிக்கக்கூடிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.. கடந்த 20 வருட உபி அரசியலை எடுத்து கொண்டால், முதல்வராக பதவியேற்ற தலைவர்கள் எல்லாருமே தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வராமல், எம்எல்சியாக இருந்துவந்தனர்.. அதனால்தான் இந்த முறை தேர்தல் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது..
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சியை பொறுத்தவரை அகிலேஷ் யாதவிற்கு நிறைய செல்வாக்குகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.. யாதவ் சமுதாயத்திற்கு எப்போதுமே சிறப்பு சலுகைகளை இவர் அறிவித்து வந்தாலும், இந்த முறை சிறுபான்மையினரின் ஆதரவை பெறவும் தன்னுடைய கவனத்தை திருப்பினார் அகிலேஷ்.. எனவே, திடீரென உயர்ந்துள்ள இவரது செல்வாக்கு, அகிலேஷூக்கு நல்ல முடிவை பெற்று தருமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல்வர்
ஆனால், இவர் 2012 முதல் 2017 வரை உபியில் பெரும்பான்மை அரசின் முதல்வராக இருந்தாரே தவிர, எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதில்லை... அதனால் எம்எல்சி யாகவே இருந்தார்.. இந்த முறை தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அவரிடம் பலமுறை எழுப்பப்பட்டு வருகிறது.. "கட்சி சொல்லும் இடத்திலிருந்து நான் போட்டியிடுவேன்இ சமாஜ்வாதி கட்சி எங்கிருந்து சொல்கிறதோ, அங்கிருந்து தேர்தலில் போட்டியிடுவேன்" என்று சொல்லி உள்ளதால், இவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
பிரியங்கா காந்தி
காங்கிரஸை பொறுத்தவரை ஒரு வருடத்துக்கு முன்பே பக்கா பிளானில் இறங்கிவிட்டது.. பிரியங்கா உபியிலேயே தங்கி கட்சியை பலப்படுத்தினார்.. பிரச்சாரங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் அம்மக்களை திரும்பி பார்க்க வைக்கிறார்.. குறிப்பாக பெண்களின் வாக்குகளை குறி வைத்துள்ளார்.. 40 சதவீத பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பிரியங்கா அறிவித்தாலும், பிரியங்காவும் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்பதும் அடுத்த கேள்வியாக எழுகிறது.. இதை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.. எனினும், அமேதியும், ராய்பரேலியும் சோனியா காந்தி குடும்பத்தின் கோட்டைகள் என்பதால் இதை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதும் பெருத்த ஆவலாக உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி
அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பொறுத்தவரை சைலண்ட்டாக இருக்கிறார்.. என்ன செய்ய போகிறார் என்றே தெரியவில்லை.. ஆனால் லேசில் எடை போட முடியாது... "மாயாவதி வீட்டை விட்டு வெளியே வருவதில்லை... அகிலேஷ் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினால், மூன்று நாட்கள் விடுப்பில் இருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் செல்ல தைரியம் இல்லை" என்று பிரியங்கா சாடினாலும், அதற்கு போதுமான பதிலை மாயாவதி தரப்பில் இன்னும் சொல்லவில்லை.
யோகி
இந்த தேர்தலில் பாஜக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. 1985-ல் இருந்து யாருமே 2 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தது இல்லை.. இதை இப்போது யோகி மாற்றியமைப்பாரா என்று தெரியவில்லை.. அதிலும் 2017-ம் ஆண்டு பார்முலாவை பாஜக கையில் எடுக்கும் என்கிறார்கள்.. அதாவது, 403 சட்டமன்ற தொகுதிகளில் 312 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, 39.67 சதவீதம் வாக்குகளை பெற்றது.. இது சரித்திர வரலாறு ஆகும்.. அந்த வகையில், 2017- போலவே இந்த முறையும் பாஜக அதிரடி காட்ட, மிக ஜாக்கிரதையாக காய் நகர்த்தி வருகறிது.. பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு மாநில மக்களுக்கு தந்து வருகிறது.. புதிய புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது..
ஆதரவாளர்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, நேற்று ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகியின் பேச்சு மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. "வரும் சட்டப்பேரைவ தேர்தல் என்பது 80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையிலான தேர்தல்.. 80 சதவீத ஆதரவாளர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.. 20 சதவீதம் பேர் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள்.. இதில், 80 சதவீதம் பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி நகர்வார்கள்.. ஆனால் 20 சதவீதம் பேர் எதிர்மனநிலையுடன் இருக்கிறார்கள்.. அவர்கள் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்... இதில், பாஜகதான் மறுபடியும் வெல்லும்" என்று கூறியுள்ளார்.
கண்டனம்
யோகி பேசிய பேச்சுக்கு சமாஜ்வாதிக்க கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது.. 80 சதவீதம், 20 சதவீதம் என்று ஆதித்யநாத் பேசியது என்பது ஏதோ வகுப்புவாத நிறத்தை பூசவது போலாகும்.. இதையெல்லாம் மக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.. பெரிதாக எடுத்து கொள்ளவும் மாட்டார்கள் என்று சமாஜ்வாதி இதை விமர்சித்து வருகிறது..
பிரிவினைவாதம்
அதேபோல காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் எல்.பூனியா சொல்லும்போது, "வகுப்புவாதம், பிரிவினைவாதத்தை வைத்துதான் பாஜக எப்போதுமே அரசியல் செய்கிறது... வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவி்ல்லை... 80 சதவீதம், 20 சதவீதம் பற்றி பேசுகிறார்கள்.. முதல்வர் பேசியது தோல்வியை ஒப்புக்கொண்டது போல் இருக்கிறது... இந்து முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது அதற்கு பலன் கிடைக்காது" என்றார். ஆக, காங்கிரஸ், பாஜக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இப்படி நாலாபக்கமும் உபி அரசியல் சூடுபிடித்து வருகிறது..!