உ.பி.யில் பாஜக வென்றாலும் மெஜாரிட்டி நஹியாம்... இப்படியும் எக்ஸிட் போல் முடிவுகள்!
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என்கின்றன சில எக்ஸிட் போல் முடிவுகள்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்றாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காது என நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி. மற்றும் ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவை.
தற்போது வாக்குப் பதிவுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.
ஆனால் நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி கருத்து கணிப்பில் பாஜக அதிகபட்சம் 185 இடங்களைத்தான் பெற முடியும்; ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைக்காது என கூறியுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு.
ஏபிபி எக்ஸிட் போல்
ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகளின் படி சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணிக்கு 156 முதல் 169 இடங்களும் பாஜகவுக்கு 167 முதல் 176 இடங்களும் கிடைக்குமாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 60 முதல் 72 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது.