உ.பி.யை நடுநடுங்க வைக்கும் கடும் குளிர்: ஒரே நாளில் 18 பேர் பலி!
டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் நிலவும் கடும் குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் குளிரால் உயிரிழந்துள்ளனர்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனி மூடப்பட்டுள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கடும் குளிரை மக்கள் தாங்கும் வகையில் இரவு நேர முகாம்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மேலும், குளிரைத் தாங்கும் வகையில் கம்பளி போன்ற பாதுகாப்புப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இதற்கென மாவட்டத்திற்கு தலா ரூ. 3,45 லட்சம் என 75 மாவட்டங்களுக்கு ரூ. 1.63 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இது மட்டுமின்றி குளிர்கால நிவாரண நிதியாக நவம்பர் 12 அன்று 17.98 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் அரசின் நிவாரணத்துறை ஆணையரான லீனா ஜாஹரி அறிவித்துள்ளார்.
அரசு இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் தொடர்ந்து அங்கு குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் குளிருக்கு பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இம்மாதத்தில் உத்திரப்பிரதேசத்தில் குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4-10 டிகிரி என்ற அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலை 3-5 டிகிரியாகவும் இருந்து வருகிறது. குறைந்தபட்சமாக முசாபர் நகரில் 2.4 டிகிரியும், லக்னோவில் 2.5 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications