உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து மேக வெடிப்பு.. நள்ளிரவில் பல வீடுகள் தரைமட்டம்.. என்ன நடந்தது?
டேராடூன்: வட இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாகக் கொட்டிய கனமழையில் பலர் மாயமாகியுள்ளனர். அங்குக் கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்தக் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுப் பாதிப்புகளும் மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே பல வடமாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. அப்படிதான் இப்போது உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டியுள்ளது.

கொட்டிய கனமழை
குறுகிய நேரத்தில் அங்குப் பெய்த இந்தக் கனமழையால் 10 பேர் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தால் அங்கிருந்த ஆறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. உத்தரகண்ட் பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எச்சரிக்கை
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவக் குழுவும், மூன்று ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன. இருப்பினும், வானிலை அங்குத் தொடர்ந்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழையும் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. சாமோலியில் வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மேக வெடிப்பு காரணமாகப் பலரும் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு, டேராடூன் மாநிலத் தலைநகரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். சாலைகள், வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு முக்கிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரில் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடரும் கனமழை
செப்டம்பர் 20 வரை டேராடூன், சம்பாவத் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக தீவிர கனமழை, உயிர்ச்சேதம், நிலச்சரிவுகள் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரித்துள்ளது.
அங்குக் கடந்த சில நாட்களாகவே கனமழை தொடர்ந்து வருவதால் மாநிலம் முழுவதும் இதுவரை 15 பேர் மாயமாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அத்தியாவசியச் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். அந்தளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
புஷ்கர் சிங் தாமி
முதல்வர் புஷ்கர் சிங் தாமி மேலும் கூறுகையில், "சேதமடைந்த உள்கட்டமைப்பைச் சீர்செய்து, போக்குவரத்தைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், வீடுகளுக்கு மின்சார இணைப்பைக் கொடுக்கவும் முயன்று வருகிறோம்" என்றார். இதுவரை சுமார் 85% வீடுகளுக்கு ஏற்கனவே மின்சாரம் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள பகுதிகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரகண்ட் மட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேசத்திலும் இந்த வாரம் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மழை தொடர்பான இந்த விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications