ராஜபக்சேவை அழைப்பதை கைவிடுக : மோடி, ராஜ்நாத்சிங்கிடம் வைகோ நேரில் வலியுறுத்தல்!!
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு அழைக்கக் கூடாது என்று பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் வலியுறுத்தினார்.
வரும் 26-ந் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ கண்ணீர் சிந்தி உருக்கமான கடிதமும் அனுப்பிப் பார்த்தார். ஆனால் பாஜக தலைவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற வைகோ முதலில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜபக்சேவை அழைப்பதை தவிர்க்குமாறு வைகோ வலியுறுத்தினார்.
தொடக்கமே தவறாகப் போய்விடக் கூடாது..
பின்னர் டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ. மோடியின் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடைபெறும் என்று நம்புகிறேன். ஆனால் அவரது பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இதுபோன்று நடக்கக்கூடாது.
தொடக்கமே தவறாக போய் விடக்கூடாது. பாரதிய ஜனதாவின் நன்மைக்காக சொல்கிறேன் என்றார்.
அப்போது ராஜபக்சே பதவியேற்பு நிகழ்ச்சி வருவது உறுதியானால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த வைகோ, மோடி என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறினார்.
மோடியுடன் சந்திப்பு
இனதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை வைகோ நேரில் சந்தித்தார். அப்போது ராஜபக்சேவை பதவியேற்கும் விழாவுக்கு அழைப்பதை கைவிட வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
மேலும் ராஜபக்சேவை அழைப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானது அல்ல; தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் இந்த சந்திப்பின் போது வைகோ சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர் பிரச்சனையை நாட்டின் தேசிய பிரச்சனை என்றவர் பாஜகவின் அருண் ஜேட்லி. அப்படியானால் ராஜபக்சேவை அழைப்பதை கைவிட்டு ஈழத் தமிழர் பிரச்சனை தேசிய பிரச்சனைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.