இந்தியாவின் நிலவு பயணத்திற்கு வித்திட்ட நாயகன்.. சந்திராயன் திட்டமும் வாஜ்பாயும்!
இந்தியாவின் நிலவு பயணத்திற்கு அடித்தளமிட்ட சந்திராயன்-1 திட்டத்திற்கு பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
டெல்லி: இந்தியாவின் நிலவு பயணத்திற்கு அடித்தளமிட்ட சந்திராயன்-1 திட்டத்திற்கு பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த திட்டத்தை தொடங்கி வைத்ததே இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். 93 வயது நிரம்பியுள்ள அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. ஒரு கிட்னி செயலிழந்த நிலையில் ஒரு கிட்னி மட்டுமே இவருக்கு இயங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

சந்திராயன்-1 வெற்றி
நிலவில் ஆராய்ச்சி செய்ய இந்தியா சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. கடந்த 2008 அக்டோபர் மாதம் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்தி சாதனை செய்தது. மிகவும் குறைந்த செலவில், அறிவியல் கணிப்புகளை வைத்து மட்டுமே சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

வாஜ்பாய் கனவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம் ஆகும் இது. இந்தியாவை நாற்கர சாலையால் இணைத்த வாஜ்பாய், நிலவிற்கும் சாலை போட எண்ணி அறிவித்த திட்டம்தான் இது. 2003ல் ஆட்சி முடிய போகும் சமயத்திற்கு முன், வாஜ்பாய் இந்த சந்திராயன் திட்டத்தை டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.

பெரிய அளவிலான திட்டம்
இந்த திட்டத்தை எத்தனை பெரிய அளவில் செய்தாலும் பரவாயில்லை என்று அவர் அப்போது இஸ்ரோவை ஊக்குவித்து இருந்தார். இதற்காக அப்போது 1000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த 5 வருடம் வரை ஆனது. அப்போதும் கூட உலக நாடுகள், சந்திராயன் திட்டத்தை பார்த்து வியந்து போய் இருக்கிறார்கள்.

சந்திராயன்-2 ஆராய்ச்சி
அவர் அப்போது போட்ட விதைதான் தற்போது நிலவுக்கு சந்திராயன்-2 விண்கல ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இதில் விண்கலம் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் ரோபோ போன்ற 'ரோவர்' ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. இதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 2020ல் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப வேண்டும் என்று மோடி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications